Monday 14 February 2011

தம்பி

எத்தனையோ முறை நான் செவிமடுத்த இந்த வார்த்தை சமீபகாலமாக எனக்கு ஒரு புதிய கோணத்தில் தென்படுகிறது. அரசியல் தலைவர்கள் முதல் அருகாமையில் வசிப்போர் வரை அனைவரிடமும் கேட்ட வார்த்தைதான். ஆனால் அன்று எங்கள் உரையாடலில் இந்த வார்த்தை ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றது என் மனதில். என் நண்பன் ஒவ்வொரு முறை அந்த சொல்லை உச்சரிக்கும் போதும் என் மனதில் ஓர் இனம் புரியாத உணர்வு. யார் அந்த தம்பி? வீரன் வேலுத்தம்பியா? தற்காலத் தம்பியா? யாராயினும் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்". ஆனால் இங்கு தமிழே, தமிழினமே அல்லவா அண்ணனாக இருக்கிறது ??????????

அனுபவம் தந்த முதிர்ச்சி

  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்கு சாட்சி மேலே உள்ள வார்த்தைகள். நல்லவை, கெட்டவை என வேறுபடுத்திப் பார்க்க இயலாத வகையில் எத்தனையோ நிகழ்வுகள். இன்று நல்லவை என்பது நாளை கெட்டவையாக மாறலாம். இதுவே மாறியும் நடக்கலாம். காலம் என்கிற சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்ட அற்ப மனிதர்கள் நாம். ஒரு நிகழ்வின் முடிவு நல்லதா, கெட்டதா என்பதை விட, அதை ஆராய்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப அதை நுகருதலே அனுபவத்தின் சிறப்பு.    வானம் போல இருக்க வேண்டும் என்ற எனது ஆசிரியர் கூற்றைப் போல அனைத்தையும் உள்வாங்கும் வானமாக மாறும் முயற்சியில்....

Saturday 20 December 2008

காதல் என் வசம்

காதலைப் பற்றி என் மனதில் உள்ளவை. காதல் என்பது ஒரு பெண்ணுக்கு ஆணுடனோ அல்லது ஆணுக்கு பெண்ணுடன் தான் வர வேண்டும் என்பது தவறு. இதைப்பற்றி விரிவாக பேசுவதற்கு முன் என்னளவில் காதல் என்பது என்ன?

காதல் என்பது பொதுவான பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை. அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்துத் தன் தன்மைகளைக் கொள்ளும். என்னளவில் காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பைக் குறிக்கும் சொல்லே. தற்கால நடைமுறையில் காதல் என்பது ஆண்,பெண் அன்பைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப் படுகிறது. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும், சகோதர சகோதரிகளுக்கு இடையிலும், ஆசிரியர் மாணவர்க்கு இடையிலும் உள்ள அன்பை யாரும் காதல் என்று சொல்வதில்லை.

ஆண், பெண் இடையேயான அன்பானது பாசம், கருணை, ஈர்ப்பு, உரிமை, ஆளுமை, மரியாதை என பல கூறுகளைக் கொண்டது. உண்மையான அன்பு ஒருவருடைய மனதையும் எண்ண ஓட்டங்களையும் மாற்றும் சக்தியுடையது. அது ஒருவரைத் தன் சமூகத்தைப் பல புதிய பரிமாணங்களில் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் தூண்டுகிறது. என்னைப் பொறுத்தவரை ஒருவன் ஒரு பெண்ணை நேசிக்கும் முன் தன் மண்ணை, நாட்டை நேசிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்தக் காதல் உண்மையாகவும் வலிமையாகவும் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இது என் முதல் பதிவாகையால் காதல் என்ற அழகான, ஆழமான, வலிமையான விஷயத்தைப் பற்றி பேசினேன். இனி......